சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெறும் சிறு, குறு நிறுவனங்களுக்கு முத்திரைக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுக் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.
சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடன்களைப் பெறுகின்றன. சொத்தினை ஈடாக வைத்து கடன்களைப் பெறும்போது, அது பதிவுத் துறையில் பதிவு செய்யப்படுவது வழக்கம். இந்தப் பதிவு நடைமுறைக்கு முத்திரைக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கும், பதிவுக் கட்டணம் 0.1 சதவீதம் என்ற அளவிலும் குறைக்கலாம் என பதிவுத் துறைத் தலைவர் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், இந்த விஷயம் தொடர்பாக உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார்.
பதிவுத் துறைத் தலைவரின் கோரிக்கை தொடர்பாக, தமிழக அரசு ஆய்வு செய்தது. அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை சொத்தினை ஈடாக வைத்து கடன்களைப் பெறும் போது, பதிவு செய்யும் நடைமுறைக்கான முத்திரைக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கிறது. மேலும், பதிவுக் கட்டணமும் 0.1 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்படுகிறது. இந்த் உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.