பொது நுழைவுத்தேர்வு அவசியமா? நிபுணர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை

பொது நுழைவுத்தேர்வு அவசியமா? நிபுணர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை

இந்தாண்டு, ஸ்டேட் போர்டு எனப்படும், மாநிலக் கல்வி முறையில் படித்து, பிளஸ் 2 தேர்வானவர்களுக்கு, மருத்துவ கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வகை செய்யும், மத்திய அரசின் அவசரச் சட்டம் தொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டுள்ளார்.

நாடு முழுவதும், மருத்துவக் கல்லுாரிகளில் சேர்வதற்கு, தேசிய பொது நுழைவுத் தேர்வு அவசியம் என்றும், இந்தாண்டும், கட்டாயம் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு, தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, மாநிலக் கல்வி முறையில் படித்து தேர்வான, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இந்தாண்டு மட்டும் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இந்த அவசரச் சட்டம், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அவசர சட்டம் தொடர்பாக, சட்ட நிபுணர்களின் கருத்தை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கேட்டுள்ளார். சட்ட நிபுணர்களின் விளக்கத்துக்கு பின், அவசர சட்டத்துக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்தால், இந்தாண்டு, மருத்துவக் கல்லுாரிகளில் சேர, மாநிலக் கல்வி முறையில், பிளஸ் 2 தேர்வான மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.