அரசு பொதுத்தேர்வுகளில் புதிய முறையில் கேள்வித்தாள்: தமிழக அரசுக்குப் பரிந்துரை

அரசு பொதுத்தேர்வுகளில் புதிய முறையில் கேள்வித்தாள்: தமிழக அரசுக்குப் பரிந்துரை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே கேட்கக்கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதேநேரத்தில் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேள்வி கேட்க வேண்டும் என, தேர்வு சீர்திருத்தக் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சீர்திருத்தம் குறித்து ஆய்வு: பொதுத்தேர்வு விதிமுறைகள் மற்றும் கேள்வித்தாளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து ஆய்வுசெய்து, தமிழக அரசுக்கு பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்க, சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) முன்னாள் தலைவர், பாலசுப்ரமணியன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில், கல்வித்துறை இயக்குனர்கள் உட்பட பலர் இடம்பெற்று உள்ளனர்.

செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து, ஏற்கனவே பல கூட்டங்களை நடத்தி, வரைவு அறிக்கை மற்றும் பரிந்துரை அறிக்கையை, பாலசுப்ரமணியன் குழு தயாரித்து, தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. கோப்பு, முதல்வரிடம் செல்வதற்கு முன், இயக்குனர்கள் பார்வைக்கு வரைவு அறிக்கையை சமர்ப்பித்து, தேவையான ஆலோசனையை பெற வேண்டும் என, குழுவிற்கு உத்தரவிடப்பட்டது.

வரைவு அறிக்கை விவரம்: அதன்படி, அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், மெட்ரிக் கல்வி இயக்குனர் பிச்சை ஆகியோருக்கு, வரைவு அறிக்கை விவரம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து துறை வட்டாரம் கூறியதாவது: பூஜா குல்கர்னி மட்டும், அறிக்கையின் விவரங்களை முழுமையாக படிக்க வேண்டும், எனவே சில நாட்கள் கால அவகாசம் வேண்டும் என கேட்டுக் கொண்டார். எனவே, ஒரு வாரத்திற்குப் பின், மாற்று கருத்து இருந்தால் அதுகுறித்து ஆலோசித்து, வரைவு அறிக்கையில் சேர்க்கப்படும்.

தேர்வு சீர்திருத்தக் குழு, 100 பக்க வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது. அதில் பரிந்துரைகள் மட்டும் 10 பக்கங்களில் இடம் பெற்றுள்ளன. பொதுத்தேர்வுக்கான விதிகள், அரசாணைகள், தற்போது தனித்தனியாக உள்ளன. இப்படி இல்லாமல், அனைத்து விதிகள், அரசாணைகளை பரிசீலனை செய்து, தேவையானவற்றை மட்டும் ஒருங்கிணைத்து, தேர்வுக்கான சட்ட விதிமுறைகளாக தொகுத்து வெளியிட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே, ஈ அடிச்சான் காப்பி போல், பொதுத்தேர்வுகளில் கேட்கக்கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதே நேரத்தில் வெளியில் இருந்து, கேள்விகளை கேட்க வேண்டும்; மாணவர்களின் அறிவை சோதிக்கும் வகையில், கேள்விகள் இருக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு, தமிழக அரசு விரைவில் ஒப்புதல் அளித்ததும், அடுத்த கல்வி ஆண்டில் (2015 – 16) இருந்து, சீர்திருத்த விதிமுறைகள் அமலுக்கு வரும். இவ்வாறு துறை வட்டாரம் தெரிவித்தது.