மக்களவைத் துணைத் தலைவராகிறார் தம்பிதுரை: போட்டியின்றி ஒருமனதாக இன்று தேர்வு

மக்களவைத் துணைத் தலைவராகிறார் தம்பிதுரை: போட்டியின்றி ஒருமனதாக இன்று தேர்வு

மக்களவைத் துணைத் தலைவராக அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம். தம்பிதுரை (67) புதன்கிழமை முறைப்படி தேர்வு செய்யப்படவுள்ளார்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மக்களவைத் தலைவராக சுமித்ரா மகாஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவியை 44 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸýக்கே வழங்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், அதை ஏற்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் மறுத்தனர். இதையடுத்து, 37 உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக குழுத் தலைவரான தம்பிதுரையை மக்களவை துணைத் தலைவர் பதவிக்கு முன்மொழிய பாஜக திட்டமிட்டது. இது தொடர்பாக பாஜக தலைவர்கள் அதிமுக தலைவர்களுடன் கடந்த சில வாரங்களாகப் பேசி வந்தனர். ஆனால், துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் போட்டியிடக் கூடும் என்று கூறப்பட்டதால் இந்த விவகாரத்தில் குழப்பம் நீடித்து வந்தது. இந்த நிலையில், மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பாக மக்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற மரபுகளின்படி அந்தப் பதவிக்கான தேர்தல் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) நடைபெறும் என்று சுமித்ரா மகாஜன் திங்கள்கிழமை அறிவித்தார்.

இதையடுத்து, துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் தம்பிதுரையின் பெயரை அதிமுக உறுப்பினர் பி. குமார் முன்மொழிய, அவரது வேட்பு மனுவை அதிமுக உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன் வழிமொழிந்தார். அதைத் தொடர்ந்து, தம்பிதுரையை முன்மொழிந்து பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் முன்மொழிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், எல்.கே. அத்வானி ஆகியோர் வழிமொழிந்து மனு தாக்கல் செய்தனர்.

இதேபோல, சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோரும் அவர்கள் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து தம்பிதுரையை ஆதரித்து மனு தாக்கல் செய்தனர்.

காங்கிரஸ் ஆதரவு: குறிப்பிடத்தக்க வகையில், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியும் தம்பிதுரையை ஆதரிக்க செவ்வாய்க்கிழமை காலையில் முடிவு செய்தது. காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜோதிர் ஆதித்ய சிந்தியா வேட்புமனு தாக்கல் செய்தனர். தேசியவாத காங்கிரஸ் சார்பில் தாரிக் அன்வர், சுப்ரியா சுலே மனு தாக்கல் செய்தனர். இவ்வாறு, செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நேர நிலவரப்படி மொத்தம் 12 வேட்புமனுக்கள் தம்பிதுரைக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டன. அவரை எதிர்த்து யாரும் செவ்வாய்க்கிழமை மாலை வரை மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், அவர் போட்டியின்றி ஒருமனதாக புதன்கிழமை காலையில் தேர்வு செய்யப்படவுள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரம் முடிந்ததும் துணைத் தலைவராக தம்பிதுரையைத் தேர்வு செய்யும் தீர்மானத்தை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட உறுப்பினர்கள் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் பேசுவர். அதன் பிறகு அவர் முறைப்படி தேர்வு செய்யப்பட்டதும் தம்பிதுரையை மக்களவை துணைத் தலைவராக உறுப்பினர்களுக்கு சுமித்ரா மகாஜன் அறிமுகம் செய்து வைப்பார்.

இரண்டாவது முறை வாய்ப்பு

மக்களவைத் துணைத் தலைவராக ஏற்கெனவே 1985 முதல் 1989-ஆம் ஆண்டு வரை தம்பிதுரை பணியாற்றியுள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஐந்து முறை மக்களவை உறுப்பினரானவர் என்ற பெருமையைப் பெற்ற அவருக்கு, தற்போது இரண்டாவது முறையாக மக்களவைத் துணைத் தலைவர் பதவியை வகிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x