புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை; உடனே பணியில் சேர உத்தரவு

புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை; உடனே பணியில் சேர உத்தரவு

புதிய ஆசிரியர்கள் பணியில் சேர சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு நேற்று முன்தினம் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்களுக்கு நேற்று பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் 12,700 புதிய ஆசிரியரை நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இறுதியில் துவங்கி செப்., முதல் வாரம் வரை நடந்தது.

’வெயிட்டேஜ்’ மதிப்பெண் தொடர்பான வழக்கில் புதிய ஆசிரியர்கள் பணியில் சேர உயர் நீதிமன்ற மதுரை கிளை, இடைக்கால தடை விதித்தது. ’வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்கள் அனைத்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடை உத்தரவும் நேற்று முன்தினம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு நேற்று பிற்பகல் திடீரென பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு:

செப்., 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடந்த கலந்தாய்வில் பங்கேற்று பணியிடத்தை தேர்வு செய்தவர்களுக்கு இன்று (நேற்று), பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாக சம்பந்தபட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும். இவ்வாறு கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதேபோல் தொடக்கக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில், ’இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு உரிய சான்றிதழ்களுடன் சென்று, பணி நியமன உத்தரவை பெற்று, உடனடியாக பணியில் சேர வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. ’புதிய ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும்’ என பணி நியமன உத்தரவை வழங்கிய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.