டி.ஆர்.பி. தேர்வில் முதன்முறையாக புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர். சீட்

டி.ஆர்.பி. தேர்வில் முதன்முறையாக புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர். சீட்

தமிழகத்தில் வரும் ஜன., 10ம் தேதி நடக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், முதன்முறையாக, புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர்., சீட் தேர்வர்களுக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் ஜன., 10ம் தேதி மாநிலம் முழுவதும் நடக்கிறது. இத்தேர்வில், பங்கேற்க, ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இத்தேர்வுகளுக்கு, தேர்வு மையங்கள் பார்வையிடல், முதன்மை கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் நியமிக்கும் பணி, அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தேர்வில், முறைகேடுகளை தவிர்க்க, ஆசிரியர் தேர்வு வாரியம் கெடுபிடியை அதிகரித்துள்ளது. சமீபத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இதுகுறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடந்தது.

கோவை மாவட்டத்தில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வுக்கு 18 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 7,500 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். பார்வையற்றவர்கள், பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு, பயிற்சிபெற்ற துணை எழுத்தர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு பணியில் ஈடுபடவுள்ள, அலுவலர்களின் உறவினர்கள் தேர்வு எழுதவுள்ளனரா என்பதை ஆய்வுசெய்து, குறிப்பிட்ட அலுவலர்களுக்கு, தேர்வு பணியிலிருந்து விலக்கு அளிக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், &’&’ஆசிரியர்கள் தேர்வில் எவ்வகையிலும் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், முனைப்புடன் உள்ளது. மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளில், அரசு தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியது போன்று, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், புகைப்படம், தேர்வர் பெயர் மற்றும் பதிவெண்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படவுள்ளது.

ஓரிரு நாட்களில், ஓம்.எம்.ஆர்., ஷீட் மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படவுள்ளது. ஓம்.எம்.ஆர்., ஷீட்டில் அச்சடிக்கப்பட்டுள்ள தேர்வர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, உடனடியாக சரிசெய்யப்படவுள்ளது” என்றார்.

மொபைல்போன் கொண்டு வர தடை: தேர்வு மையங்களுக்கு, பேஜர், கால்குலேட்டர், தொழில்நுட்பத்துடன் கூடிய கைகடிகாரம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மொபைல்போன் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

தேர்வர்கள் கொண்டுவரும், மதிப்புமிக்க பொருட்களுக்கு தேர்வர்களே முழு பொறுப்பு எனவும், எவ்வகையிலும் தேர்வு அதிகாரிகள், அலுவலர்கள் பொறுப்பேற்கமாட்டார்கள் எனவும், கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.