ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ., நடத்தும் ஜேஇஇ மெயின் தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி. ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது.

இந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதலில் ஜே.இ.இ. பிரதான தேர்வும், பின்னர் ஜே.இ.இ. முதன்மைத் (அட்வான்ஸ்டு) தேர்வும் நடத்தப்படும்.

இதில் ஜே.இ.இ. பிரதானத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகளில் சேர முடியும்.

ஜே.இ.இ. பிரதான தேர்வில் தகுதி பெற்று, அடுத்ததாக நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகளில் சேர முடியும்.

இப்போது 2015-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. பிரதானத் தேர்வு ஏப்ரல் 10,11 தேதிகளில் இணையவழி தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை நாடு முழுவதிலுமிருந்து 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு 24-5-2015 அன்று நடத்தப்பட உள்ளது. பிரதான தேர்வு தகுதிப் பட்டியலில் முதல் 1.50 லட்சம் பேர் மட்டுமே இந்த “அட்வான்ஸ்ட்’ தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர்.

தேர்வு முடிவுகளை அறிய http://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.