கோவை சர்வதேச விமான நிலையத்தில், உள்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் சிங்கப்பூர், ஷார்ஜா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் 46 முறை விமானங்கள் வந்து செல்கின்றன. செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கடந்த 2010ல், விமான நிலைய பகுதியில் பல கோடி ரூபாய் செலவில், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
விமான நிலைய வளாகத்தில், தூய்மை பணி மேற்கொள்ள, சென்னை, அப்ஷாட் யுடிலிட்டி சர்வீசஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேன்லிப்ட் நிறுவனத்தின் அதிநவீன கிரேன் உதவியுடன், நேற்று தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த கிரேன் கொண்டு அதிகபட்சமாக, 18 மீட்டர் உயரம் வரையிலான கட்டடங்களை, சுத்தப்படுத்தலாம். முற்றிலும் பேட்டரியில் இயங்கும் இந்த மெஷினை இயக்க ஒருவர். தூய்மை பணி மேற்கொள்ள ஒருவர், என பணியாற்றுகின்றனர். விமான நிலையங்கள் ஆணைய (ஏ.ஏ.ஐ) அதிகாரிகள் கூறுகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அலுவலக வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து வகை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, கிரேன் உதவியுடன் இப்பணி நடக்கிறது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. என்றனர்.