இந்திய கடற்படைக்கு ஒரே நேரத்தில் 16 ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட ‘ஐ.என்.எஸ். கொல்கத்தா’ போர்க்கப்பல் சேர்க்கப்படுகிறது. இந்த போர்க்கப்பலை வருகிற 16-ந் தேதி மும்பையில் நடை பெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்தியாவில் ‘ஐ.என்.எஸ். கொல்கத்தா’ என்ற வலிமைவாய்ந்த போர்க்கப்பல் உள்நாட்டு வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது.
‘ஐ.என்.எஸ். கொல்கத்தா’ போர்க்கப்பலில் இருந்து ஒரே நேரத்தில் 16 பிரமோஸ் ஏவுகணைகளை ஏவலாம். இந்த போர்க்கப்பல் ஆயுத கள பயிற்சியை முடித்து உள்ளது. குறிப்பாக கார்வார் கடலில் பிரமோஸ் ஏவுகணை சோதனையை நடத்தியது. தற்போது இந்திய கடற்படையில் இணைந்து பணியாற்ற தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ‘ஐ.என்.எஸ். கொல்கத்தா’ போர்க்கப்பலை இந்திய கடற்படையில் இணைக்கும் விழா வருகிற 16-ந் தேதி மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று புதிய போர்க்கப்பலை பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
ஐ.என்.எஸ். கொச்சி, ஐ.என்.எஸ். சென்னை ஆகிய போர்க்கப்பல்கள் வரிசையில் தற்போது ஐ.என்.எஸ். கொல்கத்தா இந்திய கடற்படையில் இணைக்கப்படுகிறது.
மேலும் 40 ஆயிரம் டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற உள்நாட்டில் உருவாக்கப்படும் பிரமாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் முடியும் என்று தெரிகிறது.