எப்போது வெளிவரும் குரூப் 4 தேர்வு முடிவுகள்: தேர்வர்கள் அதிருப்தி

எப்போது வெளிவரும் குரூப் 4 தேர்வு முடிவுகள்: தேர்வர்கள் அதிருப்தி

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை தேர்வு முடிவு வெளியிடப்படாததால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.

காலியாக இருந்த 2,342 காலிப்பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதிலிருந்தும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினர். தேர்வு எழுதிய ஒரு சில நாள்களிலேயே கீ ஆன்சர் எனப்படும் மாதிரி விடைத்தாளையும் தேர்வாணையம் வெளியிட்டது. தேர்வு முடிவுகள் 3 மாதங்களில் வெளியாகிவிடும் என தேர்வாணையம் அறிவித்திருந்தது.

ஆனால், தேர்வு முடிந்து 4 மாதங்கள் ஆகியும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால் தேர்வெழுதியவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து, தேர்வெழுதியவர்கள் கூறியதாவது:

தேர்வாணையம் வெளியிட்ட மாதிரி விடைகளை வைத்து பார்க்கும்போது எங்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறோம்.

தேர்வு முடிந்த 3 மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 4 மாதங்களாகியும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. கட்டாயம் தேர்ச்சி பெற்று வேலை வாங்கி விடலாம் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளவர்கள் வேறு பணிக்கு செல்லாமல் தேர்வு முடிக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அடுத்தபடியாக குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்று விட்டால் மீண்டும் குரூப்-4 தேர்வை எழுத வேண்டி இருக்காது. குறைந்தபட்சம் குரூப்-4 தேர்வுக்கு முன்பாவது கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகளை வெளியிட அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது முன்கூட்டியே கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவு வெளியானால் பயிற்சி மையத்திலாவது சேர்ந்து குரூப்-4 தேர்வுக்கு தயார் ஆகலாம் என்றனர்.

Tagged with