‘ஆயிரம் இடங்களுக்கான குரூப்-2 தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும்’

‘ஆயிரம் இடங்களுக்கான குரூப்-2 தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும்’

தமிழக அரசுத் துறையில், 1,000 குரூப் – 2 பணியிடங்கள் மற்றும் 60 குரூப் – 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று, டி.என்.பி.எஸ்.சி., (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார்.

உயர் நீதிமன்றத்தில்:

தட்டச்சர் பணி, தோட்டக்கலை அலுவலர் பணி மற்றும் குரூப் – 2 பணிகள் ஆகியவற்றுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடந்து வருகிறது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுப் பணிகள் முன்பை விட விரைவுபடுத்தப்பட்டு, மிகவும் வெளிப்படையான முறையில் நடக்கிறது; தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படுகின்றன.

கடந்த ஆண்டு நடந்த மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், இவ்வார இறுதியிலும், குரூப் – 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியிலும் வெளியிடப்படும். ஏற்கனவே தகுதித் தேர்வு நடத்தப்பட்ட, குரூப் – 1 பதவிகளுக்கு, மே 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும்.

இந்த ஆண்டு அரசுத் துறைகளில், 50 ஆயிரம் காலியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது. புதிய பணி நியமனத்துக்கான பட்டியல், அலுவலர் தேர்வுக் குழு பட்டியலின் படி நடக்கும். குரூப் – 2 பதவிகளுக்கு, 1,000 இடங்கள் காலியாக உள்ளன.

இதேபோல், சப் – கலெக்டர், போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரி அதிகாரி போன்ற, குரூப் – 1 பதவிகளுக்கு, 60 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கான தேர்வு தேதி, இம்மாத இறுதிக்குள் வெளியிட வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.