சர்வதேச அமைப்புகள்(International organizations)

சர்வதேச அமைப்புகள்(International organizations)

காமன்வெல்த் நாடுகள் (Common Wealth Countries)

இது பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் அடைந்த 54 நாடுகளின் கூட்டமைப்பு. இதற்கென சட்ட வரையறைகளோ, ஒப்பந்தமோ கிடையாது. உறுப்பு நாடுகள் பரஸ்பரம், தங்களுக்கிடையே ஒத்துழைப்பு மேற்கொள்வதே இதன் கொள்கை, இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது.

இதன் உறுப்பு நாடுகள்: ஆண்டிகுவா மற்றும் பார்புடா, ஆஸ்திரேலியா, பஹாமாஸ், வங்க தேசம், பார்படாஸ், பெலிஸ், போட்ஸ்வானா, புரூனி, கனடா, சைப்ரஸ், டொமினிக்கா, காம்பியா, கானா, கிரேனெடா, கயானா, இந்தியா, நமீபியா, மொரீஷியஸ், நௌரு, நியூஸிலாந்து, நைஜீரியா, பாப்புவா நியுகினியா,  டிரினிடாட் மற்றும் டொபாகோ, தூவலு, உகாண்டா, இங்கிலாந்து, செயின்ட் கிட்ஸ் நெவிஸ், செயின்ட் லூஸியா, செய்ஷல்ஸ், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனாடைன்ஸ், ஜமைக்கா, கென்யா, கிரிபாடி, லெஸோதோ, மாலாவி, சிங்கப்பூர், சாலமன் தீவுகள், வனாட்டு, மேற்கு சமோவா,  ஜாம்பியா, மலேசியா, மாலத்தீவு, ஜிம்பாப்வே, மால்டா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, சுவிட்ஸர்லாந்து, டோங்கா, தான்சானியா, சியரா லியோன், மலேசியா, ஃபிஜி.

(2017 ஆம் ஆண்டில் வனுவாட்டுவில் சார்க் அமைப்பின் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் மார்ச் 2015 இல் அந்நாட்டினைத் தாக்கிய மிகவும் சக்தி வாய்ந்த ’பாம்

 

அணிசேரா நாடுகள் இயக்கம் (NAM – Non-Aligned Movement)

பனிப்போர் காலத்தில் புதிதாக சுதந்திரம் அடைந்திருந்த இந்தியா உலகின் இரு பெரும் சக்திகளான அமெரிக்கா மற்றும் இரஷ்யா ஆகிய இரண்டில் ஏதாவதொன்றிற்கு ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ செயல்படாமல் ஒவ்வொரு விஷயத்திலும் அதன் தன்மையைப் பொருத்து சுயேச்சையாக முடிவெடுக்கும் வகையிலான அணி சேராக் கொள்கையைப் பின்பற்றியது. இக்கொள்கையை மையமாகக் கொண்டு ஓர் உலகளாவிய இயக்கமொன்றை முன்னெடுக்க இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு தெரிவித்த ஆலோசனையின்பேரில் இந்தியாவின் சுகர்னோ, எகிப்தின் நாசர், யுகோஸ்லோவியாவின் டிட்டோ போன்றோரால் 1961 ஆம் ஆண்டில் செர்பியாவின் பெல்கிரேடு நகரில் இவ்வமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 2016-இல் இவ்வமைப்பின் மாநாடு வெனிசூலாவில் நடைபெற்றது.

ஐரோப்பிய யூனியன்

இரண்டாம் உலகப்போர் ஐரோப்பாவில் மாபெரும் இழப்பினை ஏற்படுத்தியிருந்தது. இத்தகைய நிலை மீண்டும் ஏற்படக்கூடாது எனும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளனைத்தும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்ற நோக்கில் ரோம் உடன்படிக்கை 1957-இன்படி ஐரோப்பிய பொருளாதார சமூகம் (EEC) உருவாக்கப்பட்டது. பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு 1992-இல் மேற்கொள்ளப்பட்ட மாஸ்ட்ரிச் உடன்படிக்கையின்படி ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளை தன்னுள் கொண்ட உலகின் மிகப் பெரிய கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனாக உருவெடுத்தது. தற்பொழுது 28 நாடுகளைக் கொண்ட இக்கூட்டமைப்பு பல நாடுகளைக் கொண்ட ஒரு மாபெரும் நாடாகச் (Super Nation) செயல்படுகின்றது. இதற்கெனப் பிரத்யேகமாக நாடாளுமன்றம் மத்திய வங்கி போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் மூன்று அங்கங்களின் தலைவர்கள்

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் (European Commission) ஜியான் கிளவுட் ஜங்கர்
ஐரோப்பியக் குழுவின் தலைவர் (European Counsil) டொனால்ட் டஸ்க்
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் (European Parliament) மார்டின் ஸ்குஸ்ஸ்

 

வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு
(NATO – North Atlantic Treaty Organisation)

இது 1949-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-இல் ப்ரஸ்ஸல்ஸில் தோற்றுவிக்கப்பட்டது. வட அட்லாண்டிக் இராணுவ ஒப்பந்தம் என்னும் இந்த ஒப்பந்தத்தினால் இதன் உறுப்பு நாடுகள் தாக்கப்பட்டால் மற்ற நாடுகள் உதவிக்கு வரும். இவ்வமைப்பில் பிரான்ஸ், ஐஸ்லாந்து, நார்வே, ஸ்பெயின், நெதர்லாந்து, பெல்ஜியம், துருக்கி, அமெரிக்கா, கிரீஸ், ஜெர்மனி, கனடா, பிரிட்டன், லக்ஸம்பர்க், டென்மார்க், இத்தாலி. அல்பேனியா, பல்கேரியா, குரோஷியா, சிலி, எஸ்டோனியா, ஹங்கேரி, லத்திவியா, லிதுவேனியா, போலந்து, போர்ச்சுக்கள், ரோமானியா, ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா என 28 உறுப்பு நாடுகள் உள்ளன. பனிப்போர் காலத்தில் வார்சா உடன்படிக்கையின் மூலம் சோவியத்யூனியன் பலம் பொருந்திய நாடாக விளங்கியதை ஈடு செய்யும் நோக்கில் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சியின்போது 1991-இல் வார்சா உடன்படிக்கையும் செயலிழந்ததால் தற்பொழுது உலகின் மிகப்பெரிய மற்றும் பலம் வாய்ந்த இராணுவக் கட்டமைப்பாக நேட்டோ விளங்குகிறது. இவ்வமைப்பில் உறுப்பு நாடுகளின் படை வீரர்களடங்கிய ஒரு இராணுவப் படையும் உள்ளது.

அமெரிக்கா நேட்டோ இராணுவக் கூட்டமைப்பினை இரஷ்யாவை ஐரோப்பிய நாடுகளிடமிருந்து விலக்கி வைப்பதற்கும் ஜெர்மானியர்களை மீண்டும் தலைதூக்க விடாமல் செய்வதற்கும் தனது மேலாண்மையை நிலைநாட்டிக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்கிறது. தற்பொழுது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கெதிரானநடவடிக்கைகளில் நேட்டோ படை ஈடுபட்டு வருகின்றது. கிரீமிய விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றது.

அரபு லீக் (AL – Arab League)

அரபுநாடுகளுக்கிடையே ஒத்துழைப்பினையும் நட்புணர்வினையும் மேம்படுத்தும் நோக்குடன் செயல்படும் இவ்வமைப்பு 1945-ஆம் ஆண்டு மார்ச் 22-இல் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பு ஓமன், லிபியா, அரேபியா, சோமாலியா, டுனீஷியா, ஐக்கிய அரபுக் குடியரசு, பஹ்ரைன், குவைத், லெபனான், சவூதி அரேபியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, சிரியா, சூடான், ஏமன், மொராக்கோ, காமோரோஸ், டிஜிபோட்டி எகிப்து, கத்தார், எகிப்து, ஜோர்டான், மாரிடோனியா ஆகிய 22 உறுப்பினர்களைக் கொண்டது.

இதன் தலைமையகம் எகிப்தின் கெய்ரோ நகரில் அமைந்துள்ளது.  இவ்வமைப்பிலிருந்து 2011 ஆம் ஆண்டு முதல் சிரியா விலக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கி  (ADB – Asian Development Bank)

உலக அளவிலான வளர்ச்சிப் பணிகளுக்கு உலக வங்கி நிதியுதவியளித்து வருவது போன்று ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திலுள்ள நாடுகளில் வறுமையை ஒழிக்கவும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் நிதியுதவியளிக்கும் நோக்குடன் 1966 ஆம் ஆண்டில் ஜப்பானின் முன்முயற்சியோடு ஆசிய வளர்ச்சி வங்கி துவங்கப்பட்டது. இதில் தற்பொழுது 67 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வங்கியின் மொத்த மூலதனத்தில் 6.4 சதவிகித பங்களிப்பினை செய்துள்ள இந்தியா வாக்குரிமை அடிப்படையில் இவ்வங்கியின் நான்காவது பெயரிய நாடாக விளங்குகிறது.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்
(OPEC – Organisation of Petroleum Exporting Countries)

பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்தி சர்வதேசச் சந்தையில் பெட்ரோலிய வர்த்தகத்தினை ஒழுங்குபடுத்தவும் பெட்ரோலிய உற்பத்தியாளர்கள், நுகர்வோர், முதலீட்டாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற சூழலை தொடர்ந்து நிலைபெறச் செய்யவும் 1960 நவம்பர் 14 அன்று இராக்கின் பாக்தாத் நகரில் இக்கூட்டமைப்பு துவங்கப்பட்டது. இக்கூட்டமைப்பில் அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வாடர், காபோன், இந்தோனேசியா, ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவூதி அரேபியா ஐக்கிய அமீரகம், வெனிசுலா ஆகிய 14 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நாடுகள் உலகின் ஒட்டுமொத்த பெட்ரோலிய இருப்பில் 73 சதவிகிதத்தினைக் கொண்டுள்ளதுடன் 43 சதவிகித உற்பத்தியை மேற்கொள்கின்றன. உலகின் பெட்ரோலிய உற்பத்தி மற்றும் விலை போன்றவற்றில் இவ்வமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

சர்வதேச செஞ்சிலுவைக் குழு  (ICRC – International Committee of the Red Cross)

1859 ஆம் ஆண்டில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா இடையே ஏற்பட்ட சால்பெரினோ போரின் போது காயமுற்றிருந்த வீரர்களை கவனிக்க யாருமில்லாததால் பெரும்பாலோனோர் உயிரிழந்ததை நேரில் கண்ட மருத்துவரான ஹென்றி டுனான்ட் 1863-இல் போர்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்களின் போது நாடு, இனம், மதம் போன்றவற்றைக் கடந்து பாதிக்கபட்டவர்களுக்கு மருத்துவ உதவி புரியும் நோக்குடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினைத் துவங்கினார். உலகம் முழுவதும் சமார் 2 லட்சம் தன்னார்வலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இவ்வமைப்பு 1917, 1944, 1963 ஆகிய மூன்று ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றுள்ளது. இவ்வமைப்பின் பெயரிலும் சின்னத்திலும் கிறிஸ்த்தவ மத அடையாளமான சிலுவை இடம் பெற்றிருப்பதால் இஸ்லாமிய நாடுகளில் சிலுவைக்குப் பதிலாக பிறையும், இஸ்ரேலில் சிவப்பு நிறமுள்ள ஊடுருவும் தன்மைகொண்ட படிகமும் இடம் பெற்றுள்ளன.

இண்டர்போல் (ICPO-INTERPOL)

இவ்வமைப்பின் தலைமையகம் பிரான்ஸின் லியான் நகரில் அமைந்துள்ளது. இது 1923-ஆம் ஆண்டில் ICPC (International Criminal Police Organisation) என்ற பெயரில் நிறுவப்பட்டு, 1956 முதல் Interpol என்று பெயர் மாற்றப்பட்டது. இதில் 177 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதன் நோக்கம் அனைத்து நாடுகளின் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் குற்றங்களைக் களைவதேயாகும்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு 
(ASEAN – Association of South East Nations)

இது 1967-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-இல் ஜகார்தாவில் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பொருளாதார நிலைத் தன்மையை ஏற்படுத்துவதேயாகும். இதன் உறுப்பு நாடுகள் சிங்கப்பூர், தாய்லாந்து, மலேஷியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், புரூனே, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் மற்றும் மியான்மர் முதலியவையாகும். 2016ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 28 மற்றும் 29ஆம் மாநாடு லாவோசின் வியன்டைன் நகரில் நடைபெற்றது.

தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு
(SAARC – South Asian Association for Regional Co-operation)

இது 1985-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ம் நாள் டாக்காவில்  தோற்றுவிக்கப்பட்டது. இதில் தற்போது ஸ்ரீலங்கா, பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தலைமைச் செயலகம்: காத்மண்டு. இதன் 8-ஆவது உச்சி மாநாடு 1995-இல் டெல்லியில் நடைபெற்றது. 13-வது மாநாடு (2005) பங்களாதேஷில் உள்ள டாக்காவில் நடைபெற்றது. அப்போது ஆப்கானிஸ்தான் நாடு இவ்வமைப்பில் சேர விருப்பம் தெரிவித்ததால், தலைவர்களின் ஒப்புதலுக்குப் பின் அங்கத்தினராக சேர்க்கப்பட்டது.

இவ்வமைப்பின் 18 ஆவது மாநாடு 2014 நவம்பரில் நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்றது. 19 ஆவது மாநாடு 2016 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த நிலையில் பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவுக் கொள்கைகளை எதிர்க்க இந்தியா இம்மாநாட்டினை புறக்கணித்தது. இதனை தொடர்ந்து பூடான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் புறக்கணித்ததால் இம்மாநாடு ரத்து செய்யப்படுகிறது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம்
(OECD – Organisation for Economic Co-operation and Development)

இது 1961-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ல் பாரீஸில் நிறுவப்பட்டது. இதில் 34 உறுப்பு நாடுகள் உள்ளன. இதன் நோக்கம் உறுப்பு நாடுகளின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதேயாகும்.

ஜி – 15

பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பினை மேம்படுத்தும் அமைப்பாக செயல்படும். இது துவங்கும் பொழுது 15 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. அதன் பிறகு சிலி, ஈரான், கென்யா போன்ற நாடுகள் இவ்வமைப்பில் இணைந்தன. மற்றோர் உறுப்பு நாடான பெரு இவ்வமைப்பிலிருந்து விலக முடிவெடுத்துள்ளது. எனவே இவ்வமைப்பில் தற்பொழுது 17 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.  1989-இல் யுகோஸ்லோவியாவின் பெல்கிரேடு நகரில் நடைபெற்ற 9 ஆவது அணிசேரா இயக்க மாநாட்டில் இவ்வமைப்பினை ஏற்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது. இவ்வமைப்பின் கடைசி மாநாடு 2012 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்றது. தற்பொழுது இவ்வமைப்பின் தலைமையிடமாக கென்யா திகழ்கின்றது.

ஷாங்காய் கூட்டுறவு நிறுவனம் (SCO)

தலைமையகம்: பெய்ஜிங், சீனா ஷாங்காய் கூட்டுறவு நிறுவனம் (Shanghai Cooperation Organisation) ஒரு பன்னாட்டு அரசியல் பொருளாதார நிறுவனம் ஆகும். 2001
ஜூலை 14-இல் இந்நிறுவனம் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்க்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளின் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. 1996-இல் உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஐந்து (Shanghai Five) என்ற அமைப்பில் உஸ்பெகிஸ்தான் தவிர மற்ற நாடுகள் உறுப்பினராக இருந்தன. 2001-இல் உஸ்பெகிஸ்தான் இவ்வமைப்பில் இணைந்த பின்பு உறுப்பு நாடுகள் இந்நிறுவனத்தின் பெயரை ஷாங்காய் கூட்டுறவு நிறுவனம் என மாற்றியமைத்தன. இவ்வமைப்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 2016ல் இவ்வமைப்பின் மாநாடு உஸ்பெகிஸ்தானின் தாஷ்க்கண்ட் நகரில் நடைபெற்றது.

மெர்க்கோசர் (MERCOSUR)

தலைமையகம்: மான்ட்டிவீடியோ, உருகுவே. மெர்கோஸர் அல்லது மெர்கோஸல் என்பது இலத்தீன் அமெரிக்காவில் உள்ள ஒரு வணிகத் தொகுதியாகும். இதில் பிரேஸில், அர்ஜெண்டினா, உருகுவே மற்றும் பராகுவே ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. 1991-ஆம் ஆண்டில் அஸன்சியோன் ஒப்பந்தத்தால் மெர்கோஸர் நிறுவப்பட்டது. பின்னர், 1994-ஆம் ஆண்டில் ஊரோ பிரெட்டோ ஒப்பந்தத்தினால் இது திருத்தப்பட்டு, சமகாலத்தன்மையுடையதாக நவீனப்படுத்தப்பட்டது.

நான்கு உறுப்பினர் நாடுகளுக்கு இடையே மக்கள் மற்றும் சரக்குகள், சேவைகள், மூலதனம் ஆகியவற்றின் சுதந்திரமான போக்குவரவுகளை ஏற்படுத்தித் தருவதே இவ்வமைப்பின் நோக்கமாகும். ஐரோப்பிய ஒன்றியம் (EU), வட அமெரிக்க சுதந்திரத் தொழில் ஒப்பந்தம் (NAFDA) – ஆகிய இரண்டுக்கு அடுத்து இதுதான் மூன்றாவது மிகப்பெரும் ஒருங்கிணைந்த சந்தையாகும். தெற்கின் பொதுச்சந்தை” என இது அறியப்பட்டுள்ளது.

விடுதலைபெற்ற நாடுகளின் பொதுநல அமைப்பு  (CIS – Commonwealth of Independent States)

தலைமையகம்: மின்ஸ்க், பெலாரஸ். முன்னாள் சோவியத் குடியரசுகளான 11 விடுதலை பெற்ற நாடுகளின் கூட்டணி அல்லது சர்வதேச அமைப்பிற்கு விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநல அமைப்பு என்று பெயர். அவை: அர்மீனியா, அஜெர்பைஜான், பெலாரஸ், ஜார்ஜியா, கஜகிஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், உக்ரைன் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் மற்றும் ஒரு துணை உறுப்பினர்.

ஆப்பிரிக்க ஒன்றியம் (AU – African Union)

தலைமையகம்: அடிஸ் அபாபா, எத்தியோப்பியா. ஆப்பிரிக்க ஒன்றியமானது, ஐம்பத்து மூன்று ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்ட ஓர் அமைப்பாகும். இது 2001-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஒன்றிணைந்த ஆப்பிரிக்கப் பொருளாதார சமூகம் (AEC) மற்றும் ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பு (OAU) ஆகியவற்றிற்கு மாற்றாக இது உருவாக்கப்பட்டது. மொராக்கோ நாடு ஒன்றைத் தவிர, ஒட்டுமொத்த ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதையுமே ஆப்பிரிக்க ஒன்றியம் தனது பரவலின் கீழ் கொண்டு வந்துள்ளது. மேற்கு சஹாரா / சஹ்ராவி அரபு ஜனநாயகக் குடியரசு, ஆப்பிரிக்க ஒன்றியத்தில் உறுப்பினராக இருப்பதை எதிர்த்து மொராக்கோ இவ்வாறு வெளியில் உள்ளது. எப்படியாயினும், ஆப்பிரிக்க ஒன்றியத்தினுள் மொராக்கோ ஒரு சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஆப்பிரிக்க ஒன்றிய நிறுவனங்களிலிருந்து, அனைத்து ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகளுக்கும் அளிக்கப்பட்டு வருகிற சேவைகளைத் தானும் பெற்று ஆதாயமடைகிறது.

ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு
(APEC – Asia Pacific Economic Co-operation)

தலைமையகம்: சிங்கப்பூர். பசிபிக் கரையோர நாடுகளின் ஒரு குழுவுக்கான ஒரு பொருளாதார அமைப்பே இந்த ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) ஆகும். மண்டல பொருளாதாரம், ஒத்துழைப்பு, வாணிபம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் மீது எழும் பிரச்சனைகளை விவாதிப்பதற்கான அமைப்பு இதுவாகும். APEC அமைப்பின் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கை 21 ஆகும். பசிபிக் பெருங்கடலைக் கடற்கரையாகக் கொண்ட பெரும்பாலான நாடுகள் இவற்றுள் அடங்கியுள்ளன. 1998-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், கோலாலம்பூரில் APEC அமைப்பின் தலைவர்களுடைய ஆறாவது உச்சி மாநாடு நடைபெற்ற போது, இவ்வமைப்பில் கடைசியாக இணைந்து கொண்ட நாடுகள் பெரு, ரஷியா மற்றும் வியட்நாம் ஆகும்.

ஜி-8 (Group – 8)

உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுடைய எட்டு நாடுகள் சேர்ந்த ஒரு குழுவே ஜி-8 ஆகும். தற்சமயம்,  ஜி-8 நாடுகளில், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவை உள்ளடங்குவன.

ஜி-8 அமைப்பினுள் ஐரோப்பிய ஒன்றியம் பிரதிநிதித்துவம், பெற்றிருந்த போதிலும், உச்சி மாநாடுகளுககுத் தலைமையேற்கவோ, அவற்றைப் பொறுப்பேற்று நடத்தித் தரவோ முடியாது. ஜி-8 அமைப்பின் உறுப்பினர் நாடுகள், உலகளாவிய ஏற்றுமதியில் 49 சதவீதத்தையும், தொழிற்துறை உற்பத்தியில் 51 சதவீதத்தையும், சர்வதேச நாணய நிதியத்தின் சொத்துகளில் 49 சதவீதத்தையும் கொண்டுள்ளன. 2014-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கிரீமியா சிக்கலைத் தொடர்ந்து இவ்வமைப்பிலிருந்து இரஷ்யா விலக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே இது தற்பொழுது ஜி-7 என்றே அறியப்படுகின்றது.

ஜி-20 (Group – 20)

உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட 20 நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட அமைப்பு ஜி – 20 (G-20 – Group 20) ஆகும். உலகப் பொருளாதாரத்தில் ஜி-8 அமைப்பிற்கு மாற்றாகவும் அதனைவிட வலிமையானதாகவும் கருதப்படும் ஜி-20 அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உலகப் பொருளாதாரம் குறித்த விவாதங்களை மேற்கொள்வர். இவ்வமைப்பிற்கெனப் பிரத்யேக தலைமையகமோ பிரத்யேக தலைவரோ கிடையாது. ஒவ்வொரு வருடமும் இவ்வமைப்பின் மாநாட்டினை நடத்தும் உறுப்பு நாடு இவ்வமைப்பின் தலைமைப் பொறுப்பினை அவ்வருடத்தில் ஏற்கும். இவ்வமைப்பில் இளைஞர்கள் 20 (youth 20), மகளிர் (Women 20), தொழில் 20 (Business 20),  தொழிலாளர்கள் 20 (Labour 20) போன்ற பல்வேறு துணை அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. 2016-ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் மாநாடு சீனாவின் ஹுவாங்சோங் நகரில் நடைபெற்றது.

பிரிக்ஸ் (BRICS)

’பிரிக்ஸ்பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா – ஆகிய நாடுகளின் கூட்டமைப்பாகும். 2010-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா இவ்வமைப்பினுள் இணைக்கப்படுவதற்கு முன்பு ’பிரிக்(BRIC) என்பதே உண்மையில் இதன் பெயராகும்.

வளர்ச்சி பெற்றுவிட்ட ஜி-7 பொருளாதாரங்களிலிருந்து, உலகளாவிய பொருளாதார அதிகாரம் இடம் பெயர்ந்து, வளர்ந்து வரும் உலகத்தின் பால் திரும்பத் தொடங்கியிருப்பதன் அடையாளமாக BRICS அமைப்பு உலக முக்கியத்துவம் பெற்றது. அடுத்த சில வருடங்களில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பொருளாதாரமானது இதர வளர்ந்த நாடுகளின் பொருளாதாரங்களை விட அதிகமாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸின் உறுப்பினர்களுள், ரஷியாவைத் தவிர மற்ற நாடுகள் அனைத்துமே வளர்ச்சியடைந்து வரும் அல்லது புதிதாகத் தொழில்மயமாகிக் கொண்டிருப்பவையே. ஆனால் இந்நாடுகளுடைய மிகப்பெரிய, மிக விரைவாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்களாலும், உலகளாவிய மற்றும் பிராந்திய நிகழ்வுகளின் மீது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் மிகுந்த செல்வாக்கினாலும் இவை தனிச்சிறப்பு நிலை பெறுகின்றன. 2016ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

இப்ஸா (IBSA – India Brazil South Africa)

இந்தியா, பிரேஸில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடையிலான முத்தரப்பு – வளர்ச்சித் துறைகள் சார்ந்த முன் முயற்சியே ’இப்ஸா(South – South), பரிமாற்றத்தையும் முன்னெடுப்பதற்காக இது உருவாக்கப்பட்டது.

இப்ஸா அமைப்பு எனும் கருத்தாக்கம் பிரேசில் பிரகடனம் மூலம் முதன்முறையாக வெளியிடப்பட்டது. இந்தியா, பிரேஸில், தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் ஜனநாயக ஒற்றுமை வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் என்ற முறையில் இவற்றின் நிலை மற்றும் உலகளாவிய மட்டத்தில் செயலாற்றுவதற்கான இந்நாடுகளின் செயற்திறன் – ஆகியவை இந்த மூன்று நாடுகளும் ஒன்றிணைவதற்கு நெருங்கி வருவதற்கான மிக முக்கியமான காரணங்களாகும்.

எல்லைக் கோடுகளற்ற மருத்துவர்கள் (MSF)

தலைமையகம்: ஜெனீவா, சுவிட்சர்லாந்து. எல்லைக் கோடுகளற்ற மருத்துவர்கள் / மெடிசின்ஸ் ஸான்ஸ்ஃப்ரான்ட்டியர்ஸ் (Doctors Without Borders / Medecines Sans Frontiers (MSF)-என்பது 1971-ஆம் ஆண்டில் பிரான்ஸில் இருந்த மருத்துவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச மருத்துவ மனிதாபிமான அமைப்பாகும்.

வன்முறை, புறக்கணிப்பு, அல்லது எதிர்பாராத திடீர் பேரழிவு அல்லது பெருந்துயரம் – ஆகியவற்றினால் உயிர் வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள சுமார் 60 நாடுகளுக்கும் மேற்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்த எம்.எஸ்.எஃப். அமைப்பு சுதந்திரமான, பாரபட்சமற்ற உதவியை வழங்கி வருகிறது. ஒரு சுதந்திரமான, பாரபட்சமற்ற உதவியை யார் மிக உயர்ந்தபட்சத் தேவையில் துயரடைகின்றார்களோ அவர்கட்கு எம்.எஸ்.எஃப். வழங்குகிறது. 1999-ஆம் ஆண்டில், எம்.எஸ்.எஃப். அமைப்பு நோபல் அமைதிப் பரிசைப் பெற்றுள்ளது.

ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்

மனித உரிமைகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு மனித உரிமையைக் காக்கவும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுத் தரவும் உலக அளவில் 70 லட்சம் தன்னார்வலர்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு லாப நோக்கற்ற அரசு சாரா அமைப்புதான் சர்வதேச பொதுமன்னிப்பு சபையாகும் (Amnesty International).  இது 1961-இல் பீட்டர் பெனென்சன் என்பவரால் துவக்கப்பட்டது.

இவ்வமைப்பிற்கு 1977 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இலண்டனிலிருந்து வெளிவரும் The Observer எனும் வார இதழில் பீட்டர் பெனெசனால் எழுதப்பட்ட The forgotten prisoners எனும் கட்டுரையே இவ்வமைப்பின் தோற்றத்திற்கு காரணமாக இருந்தது.

சர்வதேச தீர்வு வங்கி (BIS)

சர்வதேச தீர்வு வங்கி (Bank for international settlements) என்பது சர்வதேச அளவில் நிதி மற்றும் நிதி தொடர்பான விவகாரங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட வழிவகை செய்யும் மத்திய வங்கிகளின் வங்கி ஆகும்.  இவ்வமைப்பில் 60 நாடுகளின் மத்திய வங்கிகள் உறுப்பினர்களாக உள்ளன.

ஜி – 77

மூன்றாம் உலக நாடுகள் எனப்படும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஐ.நா. உறுப்பு நாடுகளில் 77 நாடுகள் இணைந்து 1964-இல் ஜி-77 (Group-77) அமைப்பினைத் துவக்கின. இவ்வமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை தற்பொழுது 134ஆக உயர்ந்துள்ளது. இணைந்து செயல்படுவதன் மூலம்  ஐ.நா.வில் பின்தங்கிய நாடுகளுக்கு சாதகமான முடிவுகளையெடுக்க வழிவகை செய்யும் நோக்குடன் இவ்வமைப்பு செயல்படுகின்றது. இவ்வமைப்பின் 2016 ஆம் ஆண்டிற்கான தலைமையை தாய்லாந்து பெற்றுள்ளது.

ஜி – 24

1971 இல் துவங்கப்பட்ட இது ஜி-77 அமைப்பின் துணை அமைப்பாகும். இதில் இந்தியா உட்பட 24 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இது சர்வதேச நிதி விவகாரங்கள் தொடர்பானவற்றில் இணைந்து செயல்பட்டு உறுப்புநாடுகளுக்கு சாதகமான நிலையை உருவாக்குகின்றன. இவ்வமைப்பின் 2016 ஆம் ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பை கொலம்பியா ஏற்றுள்ளது.

ஜி – 4

ஐ.நா.வின் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்புக்குழுவில் மாற்றங்களைப் புகுத்தி அதில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளும் ஜி – 4 நாடுகள் என்றழைக்கப்படுகின்றன.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x