ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்தையும், பாம்பனையும் இணைக்கும் வகையில் கடலில் கப்பல்கள் செல்லும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்துக்கு 2014, பிப்ரவரி 24-ஆம் தேதியுடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. ரயில்வே நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து வரும் இப்பாலத்தின் நூற்றாண்டு துவக்க விழா பாம்பன் ரயில்நிலையம் அருகில் 2014, ஜனவரி 28 அன்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை வகித்து, கல்வெட்டினை திறந்து வைத்து முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பேசியது :
பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது. பாம்பன் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு 100 முறை சூரியனை பூமி சுற்றி விட்டதால் தான் இந்தப் பாலத்துக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
புயல், சூறாவளி, கடல் காற்றின் அரிப்புத்தன்மையிலி-ருந்து பாலத்தை இன்று வரை ரயில்வேத் துறை சிறப்பாக பராமரித்து வருவது பாராட்டுக்குரியது. இந்தியாவின் முதல் கடல்வழிப்பாலம் பாம்பன் ரயில் பாலம். பாம்பனில் மேம்பாலம் அமைப்பதற்கு முன்பாக இலங்கைக்கும், ராமேசுவரத்துக்கும் செல்வதற்கு மிகவும் பயனுள்ள பாலமாக இது இருந்துள்ளது. இப்பாலத்தின் மூலமாகத் தான் பயணப் போக்குவரத்தும் சுற்றுலாவும் மேம்பட்டிருக்கிறது.
மேலும், விழாவில் அப்துல்கலாம் பேசுகையில், பாம்பன் ரயில் பாலத்தின் வழியாகத்தான் சிறுவனாக இருந்தபோது பல முறை பயணம் செய்து தினமணி நாளிதழை வீடு வீடாகச் சென்று போட்டிருக்கிறேன் என்று கூறினார்.