இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மத்திய அரசு 2011ம் ஆண்டு இலவச கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்களின் திறமை குறித்து தகுதி தேர்வு நடத்தி பணியில் அமர்த்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் 2011ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதி தேர்வை நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்யவும், பணியில் சேர்ந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும் முடிவு செய்தது.
அதற்காக தமிழகத்தில் முதன் முதலாக தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 12.7.12ம் தேதி நடத்தியது. 7 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் துரதிஷ்டவசமாக 2 ஆயிரத்து 448 பேர்மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள். இது ஆசிரியர்களின் தரம் பற்றி பெரும் சர்ச்சைக்குள்ளானது.இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா ஆசிரியர்களின்கோரிக்கையை ஏற்று மீண்டும் மற்றொரு தகுதி தேர்வை நடத்தும்படி உத்தரவிட்டார். இன்னொரு தகுதித்தேர்வு 14.10.12ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். கடந்த முறையை விட இந்த தேர்வில் 19 ஆயிரம் பேர் தேர்ச்சிப் பெற்றார்கள். அடுத்தடுத்து தகுதித்தேர்வை நடத்தும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் இறங்கியது.
இந்நிலையில் கடினமான இந்த தகுதித்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மதிப்பெண்களில் சலுகைகள் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது. தமிழக அரசு தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகை வழங்க முடிவு செய்தது. 2014ம் ஆண்டு இறுதியில் ஆசிரியர் தகுதித்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டது.2014ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு இந்த சலுகையின் படி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் 2014ம் ஆண்டுக்கு முன்பு நடந்த தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் இதை ஏற்கவில்லை. எங்களுக்கும் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கி ஆசிரியர் வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கவில்லை.
இதையடுத்து தேர்வர்கள் சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்றுவழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்து வந்தது. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2 ஆண்டுகளாக தகுதித்தேர்வை நடத்தவில்லை. ஆயிரக்கணக்கானோர் எப்போது தகுதித்தேர்வு நடக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பில் நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.
தமிழக அரசின் சார்பில் 2014ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகையை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி விவாதித்து வந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம் இரு தரப்பு இறுதி வாதத்தை கேட்ட பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.இந்நிலையில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகை குறித்து உச்சநீதிமன்றம் இன்று காலையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஆசிரியர் தகுதி தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு தமிழக அரசு வழங்கிய5 சதவீத மதிப்பெண் சலுகை உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது. தங்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தேர்வு எழுதாத ஆசிரியர்கள், பட்டதாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி இயக்குனர் ராஜராஜேஸ்வரியை தொடர்பு கொண்டாம்.. அவர் கூறியதாவது:
உச்சநீதிமன்றம் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்களின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 5 சதவீதம் மார்க் தளர்ச்சி சலுகை வழங்கினால் ஏற்கனவே இறுதியாக நடந்த தகுதித்தேர்வை எழுதியவர்களில் 82 முதல் 89 மார்க் வரை பெற்றவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 198 பேர் ஆகும். 90 மார்க்கிற்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 518 பேர் ஆகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதற்கு இருந்த தடை நீங்கி விட்டது. இனிமேல் ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்ந்து நடக்கும். ஏற்கனவே இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் வெயிட்டேஜ் முறையும் அமல்படுத்தப்படும்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் பிளஸ் 2 வுக்கு 10 மதிப்பெண்கள் , பட்டப்படிப்புக்கு 15 மதிப்பெண்கள், பி.எட். படிப்பிற்கு 15 மதிப்பெண்கள், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் வைத்துக்கொள்ளப்படும்.இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2வுக்கு 15 மதிப்பெண்கள், ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பிற்கு 25 மதிப்பெண்கள், தகுதித்தேர்வுமதிப்பெண்கள் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். இதுதான் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கெடுக்கும் முறை. இதன் அடிப்படையில்தான் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. ‘இவ்வாறு அவர் கூறினார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x