ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் தீப்புண் மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றி வரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே. மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு 2014-ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதினை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கண்ணியப்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டிலும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில், ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்தந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவ்வையார் விருது எனும் உயரிய விருது வழங்கப்படும் என்றும், இந்த விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி 2012-ஆம் ஆண்டு முதல் அவ்வையார் விருது மகளிர் தினத்தையொட்டி வழங்கப்பட்டு வருகிறது.