2006 – பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.
1847- அன்னி பெசன்ட் பிறந்தார்.
அக்டோபர் 1-7 உலக வனவுயிரி வாரம்.
உலக முதியோர் நாள்.
அன்னி பெசன்ட்
ஒரு சாதாரண ஐரிஷ் குடும்பத்தில் லண்டனில் 1847ஆம் ஆண்டில் பிறந்தவர் அன்னி வூட். தந்தை வில்லியம் பைஜ்வூட் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர்.
தனது 19வது வயதில் 1867 ஆம் ஆண்டில் பிராங்க் பெசன்ட் என்ற 26 வயது மத குருவை மணந்தார். டிக்பி, மேபேல் என்ற இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரப் படிப்பைத் தொடர்ந்தார். மூடப் பழக்கவழக்களுக்கெதிராகப் பரப்புரையை ஆரம்பித்தார். இதனால் மத சமூகத்தினரின் எதிர்ப்புக்கு ஆளானார்.
இந்தியா (1893) வந்த அன்னி பெசன்ட், சென்னை அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்து பல நூல்களை எழுதினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். காசியில் சில காலம் வசித்த அன்னி பெசன்ட் அங்கு இந்து சமய விளக்கங்களை முறைப்படி பெற்றார். விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல் என்ற வாரப்பத்திரிகையை 1913 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்.
1914 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் தினசரி நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார்.1907 ஆம் ஆண்டில் சூரத் நகரில் இடம்பெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் ஏற்படவிருந்த பெரும் பிளவைத் தவிர்த்து, லக்னோவில் இடம்பெற்ற மாநாட்டில் இரு பிரிவினரையும் இணைத்து வெற்றி கண்டார். 1916 ஹோம் ரூல் (சுயாட்சி) இயக்கத்தைத் தொடங்கினார்.
ஆங்கில அரசு 1917, ஜூன் 15 ஆம் நாள் ஏனைய காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னி பெசன்டையும் கைது செய்தது. இவர்களை கைது செய்ததை கண்டித்து காங்கிரஸ் இயக்கமும், முஸ்லிம் லீக் இயக்கமும் சத்யாக்கிரகம் செய்யப் போவதாக அறிவித்தன. இதனால் நிலை குலைந்த ஆங்கில அரசு செப்டம்பரில் இவர்களை விடுதலை செய்தது.
டிசம்பர் 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக அன்னிபெசன்ட் ஓராண்டிற்குத் தெரிவானார்.
காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமையேற்ற முதல் பெண், அன்னி பெசன்ட்.